×

காதலி விஷம் கொடுத்தாரா, தற்கொலையா?.. இன்ஸ்டாகிராம் காதலன் மர்மசாவில் திடீர் திருப்பத்தால் ‘’திடுக்’’ தகவல்கள்

அண்ணாநகர்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த வீரபாண்டி என்பவரின் மகன் சஞ்சீவ்குமார்(18). இவர் திருப்பூரில் உள்ள மதுபான பாரில் பணியாற்றினார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சென்னை சூளைமேட்டை சேர்ந்த 16 வயது சிறுமி அறிமுகமாகியுள்ளார். இதன்பிறகு இருவரும் காதலித்துவந்த நிலையில், கடந்தாண்டு சிறுமியை அழைத்து கொண்டு சென்று விட்டதாக சிறுமியின் தாய் அண்ணாநகர் அனைத்து மகளின் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன்படி போக்சோ பிரிவில் வழக்குபதிவு செய்து சஞ்சீவ்குமாரை கைது செய்து சென்னையில் உள்ள சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் அடைத்துவிட்டு பின்னர் விடுவித்தனர்.

இதையடுத்து கடந்த 7ம்தேதி தனது பிறந்தநாளையொட்டி காதலியை அழைத்துகொண்டு சென்னையில் உள்ள கடற்கரை, சினிமா என்று பல்வேறு இடங்களுக்கு சுற்றிவந்துள்ளார். இதனிடையே சிறுமியை காணவில்லை என்று அவரது தாய் மீண்டும் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் 2வது முறையாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சஞ்சீவ்குமாரை தேடிவந்தனர். இந்த நிலையில், காதல்ஜோடி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சுற்றிவருவதாக தெரிய வந்ததும் சிறுமியின் தாய் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று சஞ்சீவ்குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு அவரிடம் இருந்து சிறுமியை மீட்டு வந்துள்ளனர். அப்போது சிறுமி தனது காதலனை பார்த்து, ‘’நீ குடித்த குளிர்பானத்தில் விஷம் கலந்துள்ளனர்’ என்று கூறியுள்ளார்.

இதன்பிறகு சிறிது நேரத்தில் மயக்கம் ஏற்பட்டதால் சஞ்சீவ்குமார் அங்கிருந்து பஸ்சில் சென்னை செங்குன்றத்தில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு வந்து மயக்கம் அடைந்து விழுந்தார். உடனடியாக அவரை கொள்ளுமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்துவிட்டு அங்கிருந்து ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சென்று போலீசார் விசாரித்தபோது சஞ்சீவ்குமார் கூறியதாவது;
கடந்த 7ம் தேதி எனது பிறந்தநாள் அன்று காதலி என்னை சென்னைக்கு வரவழைத்தார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தன்னை சந்தித்த காதலி, குடிப்பதற்கு குளிர்பானம் வாங்கிக் கொடுத்தார். அவற்றை முழுவதும் குடித்ததும் ‘’என்ன மன்னிச்சிருடா நீ குடிச்ச குளிர்பானத்தில் எலி மருந்து கலந்திருக்கு, உன்னோட தொல்லை தாங்கலடா, உன்னை பழிவாங்கத்தான் இங்க வரச்சொன்னேன்’’ என்று கூறி தனது கையில் இருந்த செல்போனை பிடுங்கி தரையில் போட்டு உடைத்தார். தனக்கு என்ன நடக்கிறது என்பதை உணர்வதற்குள்ளாக சிறுமியின் தாயும் சகோதரியும் சேர்ந்து என்னை தாக்கி கீழே தள்ளியதுடன் கடுமையாக எச்சரித்தனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனிடையே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சஞ்சீவ்குமார் கடந்த 14ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்குபதிவு செய்து சிறுமி, அவரது தாய் மற்றும் சகோதரியிடம் விசாரணை நடத்தியதில், ‘’இன்ஸ்டாகிராமில் தங்கள் வீட்டுப்பெண் தெரியாத்தனமாக சஞ்சீவ்குமாருடன் பழகிவிட்டாள். இதனால் அவன் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளான். அவனே குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து இறந்து விட்டான்’’ என்றனர்.

இந்த நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுமியுடன் பேருந்து நிலையத்தில் சுற்றிய சஞ்சீவ்குமார், ஒரு கடையில் குளிர்பானத்தை வாங்குவதுபோன்ற காட்சியும் அதன் பின் காதலியின் குடும்பத்தினர் தாக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. சஞ்சீவ்குமார் கொடுத்துள்ள மரண வாக்குமூலத்தின் அடிப்படையில், சிறுமி குளிர்பானம் கொடுக்கவில்லை என்பது உறுதியானது. அப்படியென்றால் சஞ்சீவ்குமார் தானாக எலி பேஸ்ட் கலந்து குடித்துவிட்டு காதலி குடும்பத்தினரை பழிவாங்கும் நோக்கத்தில் வாக்குமூலம்அளித்தாரா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.

The post காதலி விஷம் கொடுத்தாரா, தற்கொலையா?.. இன்ஸ்டாகிராம் காதலன் மர்மசாவில் திடீர் திருப்பத்தால் ‘’திடுக்’’ தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Instagram ,Annanagar ,Sanjeevkumar ,Veerabandi ,Ramanathapuram District Paramakudi ,Tiruppur ,Marmasa ,
× RELATED இன்ஸ்டா மூலம் வளர்ந்த காதல் லாட்ஜில்...